எண்ணெயும் கொலஸ்ட்ராலும்: வெளிச்சத்துக்கு வந்த
மருத்துவ அரசியல்!
இப்போது மருத்துவ உலகத்தில் மட்டுமல்ல...
உணவுச் சந்தையிலும் பெரும் பேசுபொருளாக மாறி இருப்பது எண்ணெயும்
கொலஸ்ட்ராலும்தான். அப்படி என்ன மாற்றம் நடந்துவிட்டது எண்ணெய்ப் பயன்பாட்டில்?
பண
மதிப்பிழப்பு விவகாரத்தில், நாமெல்லாம்
புதிய இரண்டாயிரம் ரூபாய்க்காக ஏ.டி.எம் வாசலில் நின்றுகொண்டிருந்தபோது, மருத்துவ உலகம் கொலஸ்ட்ரால் பற்றி, தான் ஏற்படுத்தி வந்த விழிப்புஉணர்வை வாபஸ்
பெற்றுக்கொண்டது. மருத்துவ ஆராய்ச்சி இதழ்களில், கொலஸ்ட்ரால் பற்றிய தொடர் விவாதங்கள்
உருவாகவும், கொழுப்பு
பயமுறுத்தலை வாபஸ் பெறவும் காரணம் 2015-ம் ஆண்டின் யு.எஸ்.டயட்ரி அட்வைசரி
கமிட்டியின் (USDA) அறிவிப்புதான்.
நாற்பது
ஆண்டுகளாக உலகம் முழுவதும் குதிரை வண்டியில் மைக் கட்டி பிரசாரம் செய்யும்
அளவுக்கு `கொலஸ்ட்ரால்
உடம்புக்கு நல்லது அல்ல. எண்ணெய் மோசமானது’ என்று சொல்லிக்கொண்டிருந்த அமெரிக்க உணவியல்
நிபுணர்கள், தலைகீழாக
பல்டியடித்தார்கள். அமெரிக்காவின் பிரதான உணவாக இருந்த கொழுப்பு உணவுகள், இதய நோய் பயத்தால் ஒரு கட்டத்தில் தீவிர
பிரசாரம் மூலம் கைவிடப்பட்டன. முட்டைகளையும், இறைச்சியையும் மிகக் குறைவாக அமெரிக்க மக்கள்
பயன்படுத்தத் தொடங்கினர். கொழுப்பு பற்றிய அச்சத்தை அமெரிக்காதான் உலகம் முழுவதும்
பரவச்செய்தது.
`எங்கு மருத்துவர்கள் அதிகமாக இருக்கிறார்களோ, அங்கு நோய்களும் அதிகமாக இருக்கின்றன’ என்று கூறுவதாக
எழுதியிருக்கிறார் மணிப்பால் மருத்துவப் பல்கலைக்கழகத்தின்
முன்னாள் துணைவேந்தரும், இதய நோய்
நிபுணருமான டாக்டர் ஹெக்டே.
`மருந்து மயக்கத்தில் அமெரிக்கா’ (Over
Dosed America) என்ற நூலில், மருத்துவ நிறுவனங்களின் தவறான நம்பிக்கைகள்
எப்படி பரப்பப்படுகின்றன என்பதையும், அது எப்படி வியாபாரமாக மாறுகிறது என்பதையும்
விவரிக்கிறார் அமெரிக்க மருத்துவர் டாக்டர் ஜான் அப்ரோம்சன். `நிறுவனங்களின் லாப வேட்டைக்காக மக்களின்
நல்வாழ்வு பலியிடப்படுகிறது’ என்று உரத்துக் கூறுகிறது மருத்துவ அரசியலைப் பேசும் இந்த நூல்.
உலக
மருத்துவச் சந்தை மற்றும் உணவுப் பரிந்துரைகளின் தலைமையகம் அமெரிக்காதான். அங்கு
செய்யப்படும் ஆய்வுகளும் பரிந்துரைகளும் எதிர் கேள்வியின்றி உலக நாடுகளால்
ஏற்றுக்கொள்ளப்படும். இந்த நடைமுறை பல ஆண்டுகளாகவே தொடர்கிறது. ஆய்வுகளில்
வியாபாரம் மேலோங்குவதற்கும், தவறான முடிவுகள் வெளியிடப்படுவதற்கும் பல காரணங்களைக்
கண்டுபிடித்திருக்கின்றனர் மருத்துவ அரசியலுக்கு எதிரான சில அமெரிக்க
மருத்துவர்கள். குத்து மதிப்பாக செய்யப்படும் உதிரி ஆய்வுகள், பாதிப்பு அம்சத்தை கவனத்தில்கொள்ளாத
முடிவுகள், புள்ளிவிவரங்களின்
அடிப்படையிலேயே முடிவுகளை அறிவிப்பது... என்று பல சிக்கலான விவரங்களை
வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளனர். இதில் ஆபத்தான விஷயம் என்னெவென்றால், மருந்து கம்பெனிகளின் நிதி உதவியோடுதான் அரசு
ஆய்வுகளே மேற்கொள்ளப்படுகின்றன என்பதுதான்.
மருத்துவத்தின்
தவறான ஆய்வு முடிவுகளைப் பற்றிய எதிர்க் கருத்துள்ள ஆய்வுக் கட்டுரைகள் மட்டும்
இதுவரை 7,000-க்கும் அதிகமாக ஐரோப்பிய மருத்துவ ஆய்விதழ்களில் வெளிவந்துள்ளன. இது குறித்த
கலந்துரையாடல்களோ, விவாதங்களோ
நடைபெறுவதே இல்லை. ஆய்வு முடிவுகள் ஆகப்பெரும் விளைவை மக்களிடையே ஏற்படுத்திய
பிறகுதான் படிப்படியாக விவாதம் தொடங்குகிறது. அப்படித்தான், நாற்பதாண்டு கொழுப்பு பற்றிய அச்சம் இப்போது
விவாதப் பொருளாக மாறியுள்ளது.
கொலஸ்ட்ரால்
அல்லது கொழுப்பு பற்றி இந்த அமெரிக்க ஆய்வு வெளியாவதற்கு முன்பிருந்தே பல
விஷயங்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டேயிருந்தன. அவற்றை டாக்டர் ஹெக்டே தொகுத்துத்
தருகிறார். அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்...
* ரத்தக் கொழுப்பைக் குறைப்பதற்கும் மாரடைப்புக்கும்
தொடர்பில்லை. ஏனெனில், மாரடைப்பை
உருவாக்குவது மெல்லிய குழாயை அடைக்கும் சிறு உறைகட்டிதான் (Clot). இது எதனால் உருவாகிறது என்பதை இன்னும்
உறுதிப்படுத்தாத நிலையில், மாரடைப்புக்கும்
கொழுப்புக்கும் தொடர்பை உருவாக்கியதே மருத்துவ அரசியல்தான்.
* கொழுப்பு குறைப்புக்காக அரை நூற்றாண்டுகளாக
பரிந்துரைக்கப்பட்டு வந்த எந்த மருந்துகளும் கொழுப்பைக் குறைக்கவில்லை.
* நம் உடலில் உள்ள கோடிக்கணக்கான செல்களும்
கொழுப்பினால் ஆன சுவர் கொண்டவைதான். நாம் மாரடைப்புக்கு பயந்து கொழுப்பு உணவைக்
குறைத்தால், செல்களின்
சுவர்களில் சிக்கல் வரும்; புற்றுநோய்
ஆபத்து அதிகம்.
* கொழுப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகள்
கல்லீரலின் என்சைம்களைத் தடுத்துவிடுகின்றன. நம் உடலின் ரசாயனத் தொழிற்சாலைதான்
கல்லீரல். அதன் இயக்கத்தின் குறுக்கீடு உடலில் எப்படிப் பிரதிபலிக்கும் என்பதை
எந்த மருத்துவராலும் அனுமானிக்க முடியாது.
* கொழுப்பைக் கட்டுப்படுத்தும் மருத்துவம்
என்பதே, பெரு
நிறுவனங்களின் லாபங்களுக்காக உருவாக்கப்பட்ட செயல் திட்டமே...
இப்படி
நூற்றுக்கணக்கான அதிர்ச்சிகளை தன் கட்டுரைகள் மூலம் தெரிவிக்கும் ஹெக்டே ஓர் இதய
நோய் நிபுணர் மட்டுமல்ல; மருத்துவப்
பேராசிரியர்; இந்திய
அரசின் உயர் விருதான பத்ம பூஷண் விருது பெற்ற மருத்துவர்களில் ஒருவர்.
கொழுப்பு பற்றிய
வியாபார நோக்குள்ள, உண்மைக்கு மாறான
செய்திகள் சாதாரண மக்கள் வாழ்வில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்?
மருத்துவமனைக்குச்
செல்லாத நம் அன்றாட வாழ்க்கையிலும் ஏராளமான மாற்றங்களை அமெரிக்காவின் ஆய்வு
முடிவுகளால் செய்ய முடியும். நம்முடைய எண்ணெய்ப் பயன்பாட்டைக் கவனியுங்கள்...
நம்முடைய எல்லா உணவுகளிலும் எண்ணெய் இன்று முக்கியமான இடத்தைப்
பிடித்துக்கொண்டிருக்கிறது. இயற்கையான முறையில் பிரித்தெடுக்கப்பட்ட தூய்மையான
எண்ணெயைக்கூட நம் முன்னோர்கள் மிக மிகக் குறைந்த அளவிலேயே பயன்படுத்தி
இருக்கின்றனர். நாம் சமையல் செய்வதற்கு, நல்லெண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் சிறந்தவையா? நிச்சயமாக. சோயா, சூரியகாந்தி, தேங்காய் எண்ணெய்களும் உகந்தவையே. ஆனால், இவற்றை பின்னுக்குத் தள்ளிவிட்டு சோயா
எண்ணெயை முன்னிறுத்தியது அமெரிக்காவின் பிரசாரம். சோயா எண்ணெய் வியாபாரம் அமோகமாக
இருக்க வேண்டும் என்கிற பேராசையே காரணம். அதற்காக மானியமும் வழங்கியது அமெரிக்கா.
செக்கில்
இருந்து நாம் பெறும் எண்ணெயைப் பயன்படுத்தினால் கொழுப்பு கூடும் என்கிற பயத்தையும்
உருவாக்கினார்கள். நம்மை ரீஃபைண்டு எண்ணெயைப் பயன்படுத்தச் சொன்ன அதே அமெரிக்கா, தனக்கென பல நாடுகளில் இருந்து இறக்குமதி
செய்வது தேங்காய் எண்ணெயை. அதற்குக் காரணம் அந்த எண்ணெயில் இருந்து கிடைக்கும்
மோனாலாரின். இதன் மற்றொரு பெயர் லாரிக் அமிலம்... அற்புதமான நோய் எதிர்ப்பு
சக்தியைக் கொண்ட சத்துமிக்க அமிலம். இது, எல்லா உணவுப் பொருட்களிலும் கிடைப்பதில்லை, தாய்ப்பாலிலும் தேங்காய்ப்பாலிலும் மட்டுமே
கிடைக்கும். ஆயுள் முழுக்க நாம் நோய் எதிர்ப்பு சக்தியோடு இருக்க தாய்ப்பால் அவசியத் தேவை; அதேபோல தேங்காய் எண்ணெயும் முக்கியமானது.
இது
மட்டுமல்ல... இயற்கையாகக் கிடைக்கும் அனைத்து தாவர எண்ணெய்களும் சிறந்தவையே.
இவற்றைப் பயன்படுத்தினால், நம் உடலில்
கொலஸ்ட்ரால் அதிகமாகாது. உண்மையில், இந்த எண்ணெய்கள் நம் ரத்த நாளக்
குறைபாடுகளைப் போக்கும் தன்மைகொண்டவை. இதை, சமீபத்தில் சில ஆய்வுகளும் நிரூபித்துள்ளன.
சமையல்
தொடங்கி தங்களின் அத்தனை தேவைகளுக்கும் கேரள மக்கள் உபயோகிப்பது தேங்காய் எண்ணெயை.
ஆனால், கொலஸ்ட்ராலாலோ, இதய நோய்களாலோ பாதிக்கப்பட்ட மாநிலங்களின்
பட்டியலில் இடம் பெறாத ஒரே மாநிலம் கேரளா.
மருத்துவ
ஆய்வுகளுக்குள்ளும், அதன்
முடிவுகளுக்குள்ளும் போவதற்குப் பதிலாக, நம்முடைய சாதாரண வாழ்வை உற்றுக் கவனித்தால்
அதில் பல உண்மைகள் புலனாகும். ஏ.சி அறைகளில் முடிவுசெய்யப்படும் பரிசோதனைகளில்
பெரும்பாலானவை பயன்பாட்டு அடிப்படையில் பரிசீலிக்கப்படாதவை.
கொழுப்பு பற்றி
நாம் ஒரு முடிவுக்கு வருவதற்கு இரண்டு விஷயங்களைப் பார்க்கலாம்.
மிகச்
சமீபத்தில் பரவலாகிவரும், `பேலியோ டயட்’. இது முழுக்க முழுக்க கொழுப்பை அடிப்படையாகக்கொண்ட உணவு முறை. லட்சக்கணக்கான
நபர்கள் பின்பற்றும் இந்த உணவு முறையில் கொழுப்பை மட்டுமே தினமும் சாப்பிட
வேண்டும் என்பதுதான் முக்கியமானது. ஏன் இப்படி கொழுப்பைச் சாப்பிடச் சொல்கிறார்கள்?
நம்முடைய செல்கள்
தங்களுக்குத் தேவையான குளூக்கோஸை சாதாரணமாக நாம் சாப்பிடும் இனிப்புப் பொருட்களில்
இருந்து பெறுகின்றன. அதாவது, மாவுப் பொருட்களில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகளில் இருந்து குளூக்கோஸை
உருவாக்கிக்கொள்கின்றன. நம் செல்களுக்கு இன்னொருவிதத்திலும் குளூக்கோஸை உருவாக்கத்
தெரியும். எங்கிருந்து தெரியுமா..? கொழுப்பில் இருந்து. நம் உடலில் உருவாகும்
கொழுப்பில் இருந்து நம் செல்கள் குளூக்கோஸை உருவாக்கும்
தன்மையைக்கொண்டிருக்கின்றன. கார்போஹைட்ரேட் இல்லாத நிலையில், கொழுப்பில் இருந்து செல்கள் குளுக்கோஸைப்
பிரிக்கத் தொடங்கும்.
எனவேதான், பேலியோ டயட்டை பின்பற்றும் நபர்கள் முழுமையாக மாவு, இனிப்புப் பொருட்களைத் தவிர்த்துவிட்டு, முற்றிலும் கொழுப்பை மட்டுமே உண்கிறார்கள்.
அவர்களுக்கு எவ்விதமான கொழுப்பால் உருவாகும் நோய்களும் வந்துவிடவில்லை. மாறாக, ஸ்லிம்மான, வலுவான உடற்கட்டு உருவாகிறது. உடல்பருமனால்
பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இப்படிக் கொழுப்பைச் சாப்பிட்டு, சாப்பிட்டே தங்கள் உடலைக்
குறைத்துக்கொள்கிறார்கள். நம்மிடம் இருந்த கொழுப்பு பயம் உண்மையாக இருந்தால், இது எப்படி சாத்தியமாகும்?
கொழுப்பு
நல்லது என்பதால் பேலியோ ஆட்கள்போல, எல்லோரும் கூடுதலாக கொழுப்பு உணவைச்
சாப்பிடலாமா?
எப்போதுமே
எல்லா உணவிலும் அளவு மிக முக்கியமானது. கொழுப்பைக் கண்டு அச்சப்படவும்
அவசியமில்லை. அதே நேரம், அளவை மீறி
அதிகப்படுத்தவும் தேவையில்லை.
ஆட்டுக்
கறிக்கடையில் உரித்து தொங்கவிடப்பட்டுள்ள ஆட்டை கவனித்திருக்கிறீர்களா? தசை இருக்கும் அளவுக்கு கொழுப்பு
படிந்திருக்கும்.
நம்முடைய
உடலில் கொழுப்பு உருவாகாமல் இருப்பதற்கு நம்முடைய மருத்துவர்கள் என்னென்ன
ஆலோசனைகள் சொன்னார்கள் நினைவில் இருக்கிறதா? அசைவம் சாப்பிடக் கூடாது, எண்ணெயைக் குறைவாகப் பயன்படுத்த வேண்டும், கொழுப்பு உள்ள உணவுகளை உட்கொள்ளக் கூடாது.
இவைதானே?
மறுபடியும்
ஆட்டைக் கவனியுங்கள். எண்ணெயை வாழ்நாளில் பார்த்திராத ஆடு, அசைவம் சாப்பிட்டிருக்காத சைவப் பிராணியான
ஆடு, கொழுப்புள்ள
உணவை அறிந்திராத ஆடு இவ்வளவு கொழுப்பை எங்கிருந்து பெற்றது?
இதுதான் நம்
உடலின் ரகசியம். நம் உடலுக்கு என்னவிதமான பொருள் தேவையோ அதனை உடலே
தயாரித்துக்கொள்கிறது. உணவுகளின் துணையோடு உடல் தேவையானதை தயாரித்தாலும், உணவை மட்டுமே நம்பித் தயாரிக்கவில்லை. நம்
உணவில் என்ன இருக்கிறதோ, அதை மட்டுமே
நம் உடலால் தயாரித்துக்கொள்ள முடியும் என்று தவறாக நினைத்துக்கொள்கிறோம்.
மக்சீனியத்தில் இருந்து கால்சியத்தை மாடுகள் உருவாக்கிக்கொள்கின்றன. நமக்கு பாலைத் தருகின்றன. நாம் கால்சியம் தேவை என்று கால்சியம் உள்ள
பொருட்களையே தேடிக்கொண்டிருக்கிறோம்.
உடலுக்கு
என்ன வேண்டும் என்பதை உடல் பார்த்துக்கொள்ளும். கிடைக்கிற உணவை, விருப்பத்தோடு, அளவோடு உண்பது மட்டுமே நம்முடைய வேலை.
மனிதர்களைப் பார்க்காத, விலங்குவழி
ஆய்வுகளின் வழியே வெளிவரும் ஆய்வு முடிவுகளை எப்போதும் நாம் பின்பற்றத்
தேவையில்லை. அது, மிகப் பெரும்
வியாபார வலையில் நம்மை சிக்கவைக்கக்கூடும்.
`தெரிந்ததைத் திரும்பச் சொல்வதல்ல அறிவு; தவறான நம்பிக்கைகளைத் தவிர்ப்பதே அறிவு!’ - கார்ல் பாப்பர்.
- அக்கு ஹீலர்
அ.உமர் பாரூக்
நன்றி: விகடன்
http://www.vikatan.com/news/health/77990-medical-politics-behind-oil-and-cholesterol-comes-to-light.art
மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.